உண்ணாவிரதம் இருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களை சந்தித்த வைகோ
இலங்கை தமிழர்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட 8 லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கல்லூரி அருகே நேற்று உண்ணாவிரதத்தை துவங்கிய அவர்களுக்கு போலீசார் எதிரிப்பு தெரிவித்ததால் இரவு 9.30 மணிக்கு இடத்தை மாற்றினர். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்களுக்கு பல்வேறு கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மாணவர்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லயோலா கல்லூரி அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதை தான் வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காக இதுவரை 19 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு மதிமுக ஆதரவு அளிக்கிறது. அவர்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய மதிமுக தயாராக உள்ளது என்றார்.