விஜேந்தர்சிங்குடன் சேர்ந்து போதை மருந்து வாங்கியது உண்மை..ஆனா பயன்படுத்தலை: ராம்சிங்
பஞ்சாப் மாநிலத்தில் ரூ130 கோடி மதிப்பிலான 26 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் சிக்கியது. அப்போது அந்த குடியிருப்புக்கு வெளியே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரரான விஜேந்தர்சிங்கின் மனைவியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் போதைப் பொருள் பறிமுதல் வழக்கில் முன்னாள் குண்டு எறிதல் வீரர் அனுப் சிங் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் குத்துச் சண்டை வீரர்கள் விஜேந்தர் சிங், ராம்சிங் ஆகியோர் அனுப்சிங்கின் வாடிக்கையாளர்கள் என்ற விவரமும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தேசிய குத்துச் சண்டை வீரரான ராம்சிங்கை போலீசார் வளைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜேந்தருடன் இணைந்து 4 முறை போதை மருந்து வாங்கியது உண்மை தான்.. ஆனால் நாங்கள் இருவரும் அதை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜேந்தர்சிங் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்திய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் வரும் நாட்களில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
தற்கொலை முயற்சி
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனுப்சிங் தமது மணிக்கட்டை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார்? இன்னும் சில பிரபலங்களுக்கும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.