3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்களின் இலங்கை எதிர்ப்பு உண்ணாவிரதம்
8ம் தேதி காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
இதில் திலீபன், ஜோசப் பிரிட்டோ, அந்தோணி சாஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், லியோ ஸ்டாலின் ஆகிய 8 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள செங்கொடி திடலில் தங்களது போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர், பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் பெரும் திரளாக வந்து மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான ஆகியோர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவும் பல மட்டங்களில் பெருகி வருகிறது.
டிவிட்டரில் குவியும் ஆதரவு
இதற்கிடையே, லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டிவிட்டரில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.