லயோலா கல்லூரி மாணவர்களை வாழ்த்த வந்த திமுக எம்.பிக்கு எதிர்ப்பு
8ம் தேதி காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்லனர்.
இக் கல்லூரியைச் சேர்ந்த திலீபன், ஜோசப் பிரிட்டோ, அந்தோணி சாஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், லியோ ஸ்டாலின் ஆகிய 8 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள செங்கொடி திடலில் தங்களது போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இவர்களைப் பார்க்க திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்கள் பேசக் கூடாது என்று கூறி தமிழ் உணர்வாளர்கள் சத்தமாக கோஷமிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், டி.கே.எஸ்.இளங்கோவனும், சுப.வீரபாண்டியனும் மாணவர்களை வாழ்த்திப் பேசி விட்டுச்சென்றனர்.