ஏப்ரல் 14ல் தேர்தல்… வெனிசுலாவின் அடுத்த ரட்சகன் யார்?
14 ஆண்டுகாலம் வெனிசுலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஹியூகோ சாவேஸ் புற்றுநோய் பாதிப்பினால் கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வந்த நிக்கோலஸ் மடுரோ, அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.
தனக்கு பின்னர் அதிபர் பதவியை யார் ஏற்க வேண்டும்? என்பதை கடந்த டிசம்பர் மாதமே சாவேஸ் அறிவித்திருந்தார். அதன்படி,
மக்களின் உறுதுணையோடு வெனிசுலா நாட்டின் அரசியலமைப்புக்கு கீழ்படிந்து, இறையாண்மையை பாதுகாப்பேன் என மறைந்த ஹியூகோ சாவேஸ் பெயரால் உறுதி ஏற்கிறேன் எனக் கூறி பதவி பிரமாணம் ஏற்றார் நிக்கோலஸ் மடுரோ.
நிக்கோலஸ் மடுராவின் பதவியேற்பு மோசடியானது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் மரணமடைந்தால் பாராளுமன்ற சபாநாயகர் தான் அடுத்த அதிபராக பதவியேற்க வேண்டும் என்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டினை நிராகரித்த உச்சநீதிமன்றம், தற்காலிக அதிபராக நிக்கோலஸ் மடுரோ பதவியேற்க தடையேதும் இல்லை. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிடலாம் என கருத்து தெரிவித்துள்ளது.எனினும், இந்த பதவி ஏற்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஏப்ரல் 14ல் தேர்தல்
வெனிசுலா நாட்டு சட்டப்படி அதிபராக பதவி வகிப்பவர் மரணமடைந்தால் 30 நாட்களுக்கு தேர்தல் மூலம் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏப்ரல் 14ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ள ஹியூகோவின் அரசியல் வாரிசு நிக்கோலஸ் மடுரோ அதிபர் பதவிக்கு போட்டியிடுவார்.
வெனிசுலா வின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுபவர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டும். சவேஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை கட்டிக்காப்பதோடு, எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவின் பொக்கிசத்தையும் பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில் வறுமையிலும், நோயிலும் உழன்ற வெனிசுலா மக்களை 14 ஆண்டுகாலம் பாதுகாத்த ரட்சகனாவே ஹியூகோ சாவேஸ் திகழ்ந்தார். இனி தேர்வு செய்யப்படப்போகும் தலைவர்தான் வெனிசுலாவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப்போகிறவராக இருப்பார் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.