ஹியூகோ சாவேஸ் உடலுக்கு 20 லட்சம் மக்கள் அஞ்சலி… பதப்படுத்தப்பட்ட உடல் காட்சிக்கு வைப்பு
வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். அவருடைய உடல் தலைநகர் கராகாஸிலுள்ள ராணுவ அகாடமிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த ஊர்வலம் சென்ற வழிநெடுக பொதுமக்கள் திரண்டு கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ அகாடமியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்றதால் 10 மணி நேரம் வரையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியதாக அதிகாரிகள் கூறினர். அர்ஜென்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ், உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகா மற்றும் சில நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சாவேஸின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ, ஈரான் ஜனாதிபதி முகமது அகமதினிஜாத், ஈகுவேட்டார் ஜனாதிபதி ரபேல் கோர்ரியா உள்பட 30 க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க பிரதிநிதிகளாக ஜார்ஜ் மேக்ஸ், வில்லியம் டெலாஹன்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்படாமல் அதை வாசனை திரவியம் மற்றும் மூலிகைகள் பூசி பதப்படுத்தி ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு மேலும் 7 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இதை வெனிசுலாவின் துணை அதிபரும், புதியஅதிபராகவுள்ளவருமான நிகோலஸ் மதுரோ அறிவித்தார்.
ரஷிய தலைவர் லெனின், சீன தலைவர் மாவோ ஷிடாங் ஆகியோர் உடல்கள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுபோல சாவேஸ் உடல் ராணுவ அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.