ஆஜ்மீர் தர்கா நிர்வாகிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: சிவசேனா
பாகிஸ்தானின் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் சனிக்கிழமை அஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரது வருகைக்கு தர்கா நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இது குறித்து ஜைனுல் அபிதீன் அலி கான் கூறுகையில், நபிகளின் போதனைகளையும் குரானையும் பின்பற்றாத பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தரக் கூடாது, மனிதாபிமானமற்ற வகையில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்திருக்கின்றனர். அத்துடன் இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையையும் எடுத்து சென்றிருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீருக்கு வருவதற்கு முன்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய வீரரின் தலையை ஒப்படைக்க வேண்டும்.
இந்த கொடுஞ்செயலுக்காக பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். பாகிஸ்தான் பிரதமரின் இந்திய வருகையை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் அவர் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தந்தால் அவரை முன்னின்று நான் வரவேற்க மாட்டேன் என்றார்.
அதே போல அவரை வரவேற்கவும் வராத திவான், அந் நாட்டுப் பிரதமர் அளித்த நன்கொடையையும் ஏற்க மறுத்துவிட்டார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், நாட்டின் மீது உண்மையான பற்றும், தைரியமும் கொண்டவரான ஜைனுல் அபிதீன் அலி கான் இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆபரணம் ஆவார். அவருக்கு பாரத ரத்னா வழங்கி பாராட்ட வேண்டும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரின் வருகையைத் தடுக்காத மத்திய அரசு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது.
அந் நாட்டுப் பிரதமர் வந்து சென்ற பிறகு ஆஜ்மீர் பகுதியில் சாலைகளை அப் பகுதியினர் சுத்தப்படுத்தியுள்ளனர். முஸ்லீம்களும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டனர்.
திவான் அலி கானின் இந்தச் செயல் நாட்டுக்கு ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்துள்ளது. அவருக்கு பாரத ரத்னா தருவது சாதாரண இந்திய முஸ்லீம்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார் உத்தவ்.