நீதி கிடைப்பதில் தமிழகத்தை விட மோசமானது கர்நாடகம் - மதானி பாய்ச்சல்
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி, தனது மகள் திருமணத்திற்காக 5 நாள் பரோலில் கேரளா வந்துள்ளார்.
நேற்று கொல்லத்தில் அவரது மகள் திருமணம் நடந்தது. அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பரோலில் அவரை விடுவித்த கர்நாடக உயர்நீதமன்றம் பல்வேறு நிபந்தனைளையும் விதித்தது. அதில் முக்கியமானது, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தரக் கூடாது, நிகழ்ச்சி எதிலும் பேசக் கூடாது என்பது. இருப்பினும் தனது மகள் திருமணத்தின்போது மதானி பேசினார். அப்போது கர்நாடக நீதித்துறையை கடுமையாக அவர் சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதானி பேசுகையில், எனக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. நீதியின் வெளிச்சம் என்னிடமிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் பரோலில் வந்திருப்பதால் நீதித்துறை அமைப்பு மாறி விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம். எனக்கு பரோல் மறுக்க முடியாது என்ற கட்டாயத்தால்தான் நான் ஜாமீனில் விடப்பட்டேன்.
கேரளாவில் நீதித்துறை சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பதை நான் நிம்மதியாக உணர்கிறேன். அதேபோல தமிழகமும் கூட பரவாயில்லை. தமிழத்தை விட கடுமையாக இருக்கிறது கர்நாடகம்.
சிறையில் நான் ஒரு அப்பாவி மட்டுமே இருக்கவில்லை. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அடைபட்டுள்ளனர். நான் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நம்முடைய மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி அனாதைச் சிறுவனையும் அடைத்து வைத்துள்ளனர் என்றார் மதானி.