55 நாட்கள் நடைபெற்ற அலகாபாத் மகா கும்பமேளா நிறைவு! இறுதி நாளில் 30 லட்சம் பேர் புனித நீராடல்!!
அலகாபாத்: அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 55 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் 30 லட்சம் பேர் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என 3 நதிகளும் சங்கமிக்கிற திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தியன்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் லட்சக்கனக்கான பக்தர்களும் சாதுக்களும் புனித நீராடினர். கடந்த மாதம் 10-ந் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 3 கோடிப் பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டனர். அன்று ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 39 பேர் பலியாகினர்.
நேற்று மகா சிவராத்திரி நாளில் கும்பமேளா நிறைவடைந்தது. நேற்று மட்டும் சுமார் 30 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்த மகா கும்பமேளாவை தீவிரவாதிகள் சீர்குலைக்கக் கூடும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.