தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி 29 மாணவர்கள் தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம்!!
சென்னை: தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் 29 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட போதும் இம்மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
சந்திரபோஸ்,துரைமுருகன், விஜயகாந்த், ஜான்பாண்டியன், முத்துக்குமார் ...
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் 6 மாணவர்கள், திருச்சி புனித வளனார் கல்லூரியின் 11 மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதேபோல் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கோகுல கண்ணன்,சௌந்திரபாண்டியன், விஜயகாந்த், சிவ சந்திரபோஸ், முத்துக்குமார், ஜெயசந்திரன், பால்பண்டியன் (எ) ஜான்பாண்டியன், சுபாசந்திரபோஸ், ஆனந்த்ராஜ்,ஆனஸ்ட்ராஜ், அணிஸ்ட்ராஜ், துரைமுருகன் ஆகிய 12 பேர் இன்று காலை முதல் கல்லூரிக்குள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் (எசனை,கடகால்) மாணவர்கள் சாலைமறியலை நடத்தினர். வேலூரில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் Internal மார்க் கிடைக்காது என்று காவல்துறையினர் மிரட்டி இருக்கின்றனர். கோயம்புத்தூரிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடலூரில் உண்ணாவிரதம்
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கலந்து கொண்டுள்ளார்.
சு. சுவாமி உருவபொம்மை எரிப்பு
மேலும் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவ பொம்மையை மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மறியல்
சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் அடையாறு- கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் தென் சென்னைப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.