மதுரை, திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: கூட்டம் துவங்கும் முன்பே திமுகவினர் வெளிநடப்பு
மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் ராஜன் செல்லப்பா இன்று தாக்கல் செய்தார்.
2013-2014ம் ஆண்டுக்கான மதுரை மாநகராட்சியின் நிதிநிலை வரவு செலவுத் திட்ட அறிக்கையை மேயர் ராஜன் செல்லப்பா இன்று தாக்கல் செய்தார்.
அதில் குறிப்பிட்டப்படுள்ளதாவது,
மாநகராட்சியின் வரவு ரூ.69 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரம், செலவு ரூ.705 கோடியே 91 லட்சத்து 96 ஆயிரம், உபரி வருவாய் ரூ. 3 கோடியே 35 லட்சத்து 54 ஆயிரம், பற்றாக்குறை ரூ.11 கோடியே 3 லட்சமாக இருக்கும். இந்த பற்றாக்குறையை பல்வேறு வரிவிதிப்பின் மூலம் சரி செய்துவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பட்ஜெட் கூட்டம் துவங்கும் முன்பே திமுக அவைக் குழு தலைவர் எம்.எல்.ராஜ் தலைமையில் 9 திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்வோம் என்று தெரிவித்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இதே போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருவதால் முழுவதுமாக நீக்க வேண்டி இருக்கும் என்று மேயர் கூறினார்.
இதையடுத்து பட்ஜெட் பட்டியலை 4 நாட்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்ற மரபை மீறி செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுகவினர் கோஷமிட்டனர். இதையடுத்து திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்றுமாறு மேயர் உத்தரவிட்டார். ஆனால் அவைக் காவலர்கள் வரும் முன்பே அவர்கள் வெளியேறினர்.
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்:
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலையில் நடந்தது. திருச்சி மேயர் ஏ.ஜெயா தலைமையில், ஆணையர் வே.ப. தண்டபாணி முன்னிலையில் நடந்த கூட்டத்தில் நிதிக்குழுத் தலைவர் வி. ஐயப்பன் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
திருச்சியிலும் பட்ஜெட் கூட்டம் துவங்கும் முன்பே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது அவையில் அதிமுக உறுப்பினர்கள் மட்டும் தான் இருந்தனர்.
பட்ஜெட்டில், ரூ. 31.50 கோடி புதிய விரிவடைந்த குடிநீர் திட்டம், ரூ. 3 கோடி செலவில் சென்னூர் அண்ணா நகரில் அறிவியல் பூங்கா அமைக்கும் திட்டம், ரூ. 1 கோடி செலவில் வணிக வளாகம் கட்டும் திட்டம், பஞ்சப்பூரில் தண்ணீர் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்கா, ரூ.75 லட்சம் செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருந்தன.