டெசோ பந்த்: கடையடைப்பு செய்யச் சொல்லி வணிகர்களை வற்புறுத்தக் கூடாது- வெள்ளையன்
சென்னை: டெசோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டத்தின்போது கடையடைப்பு செய்ய வணிகர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12ம் தேதி டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து 2009ல் தமிழ்நாட்டில் முதல் கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது எங்கள் பேரவை தான். அப்போது எங்களைக் கைது செய்து, எங்கள் போராட்டத்தை அப்போதிருந்த திமுக அரசு எப்படியெல்லாம் நசுக்க முயன்றது என்பதை நாடு அறியும்.
ஈழத்தில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல் தமிழகமெங்கும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி எங்கள் உணர்வை வெளிப்படுத்தினோம்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முழு மனதாக ஆதரிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே மத்திய அரசில் அவரது கட்சி அமைச்சர்கள் இருப்பதும், அந்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழ்நாட்டில் அவர்களே போராட்டம் நடத்துவதும் வணிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருப்பதை நாங்கள் வழிமொழிகிறோம். டெசோ அமைப்பும் இந்தக் கருத்தை வழிமொழிய வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு அரசியல் ரீதியான வழிகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு கடையடைப்பு செய்ய வேண்டும் என்று வணிகர்களைக் கட்டாயப்படுத்த கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.