நாளை தமிழகத்தில் டெசோ பந்த்.. வழக்கம் போல பஸ் ஓட்ட அதிகாரிகள் நடவடிக்கை
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க் குற்றவாளியான ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் நாளை பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே போல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல இது நேரமல்ல. நமது உணர்வுகளை காட்டிட அணைவரும் ஒத்துழைத்து வேலை நிறுத்தத்தை வெற்றியாக்கி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு குழு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் முக்கியக் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆதரவா? இல்லையா? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக ஆகியவை பந்த் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்து விட்டன. அதேபோல பாஜகவும் ஆதரவு இல்லை என்று கூறி விட்டது. வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தரப்போவதில்லை என்று கூறி விட்டது. கடைகளை யாரும் அடைக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் தரப்பு எடுக்க ஆரம்பித்துள்ளதாம்.
மாநிலம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு சர்க்குலர் போயுள்ளதாம். அதில், தற்செயல் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து ஊழியர்களும் நாளை பணிக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பேராட்டத்தில் கலந்து கொள்ளாததால் ஆட்டோக்களும் வழக்கம் போல் இயங்கும்.
இதுகுறித்து சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாநில துணை பொது செயலாளர் மனோகரன் கூறும் போது, நாங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் 65 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. நாளை வழக்கம் போல் அனைத்து ஆட்டோக்களும் ஓடும் என்றார். திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள் மட்டும் ஓடாது.
பந்த் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு முதலே போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படவுள்ளது.