தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன்
ஷ்வான், தென் ஆப்பிரிக்கா: தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 8 வயது பேரனை, 61 வயது பாட்டிக்குக் கட்டிக் கொடுத்துள்ளனர், தென் ஆப்பிரிக்காவில்.
தென் ஆப்பிரிக்காவில் இதுதான் தறபோது சூடான பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் ஷ்வான் பகுதியைச் சேர்ந்தவர் பேஷன்ஸ் மசிலேலா. 46 வயதாகும் இவருக்கு 8 வயதில் செனேல் மசிலேலா என்ற மகன் உள்ளான்.
மசிலேலாவின் தாத்தா சமீபத்தில் இறந்தார். சாகும் முன்பு,தனது பேரனின் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். ஆனால் கல்யாணத்தைப் பார்க்காமலேயே கண்ணை மூடி விட்டார்.
அதேபகுதியைச் சேர்ந்த 61 வயதான ஹெலன் ஷபாங்கு என்பவர், செனேலை மணக்க முன்வந்தார். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. கணவரும் இருக்கிறார். செனேலின் தாத்தாவின் ஆத்மா சாந்தி அடைவதற்காக இந்தத் திருமணத்திற்கு உடன்பட்டார் ஹெலன்.
இதையடுத்து திருமணம் விமரிசையாக நடந்தது. கிட்டத்தட்ட 100 விருந்தினர்கள் வருகை தர, செனேல் - ஹெலன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பெண்ணின் விரலில் மாப்பிள்ளை மோதிரம் போட்டார். பின்னர் மணப்பெண்ணும், மணமகனும் உதடோடு உதடு பொருத்தி முத்தமும் இட்டுக் கொண்டனர்.
இந்தத் திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பலைகளையும் கிளப்பி விட்டுள்ளது. இந்தத் திருமணத்தை சிலர் கடுமையாக கண்டித்து விமர்சித்துள்ளனர்.
ஆனால் திருமணம் குறித்து செனேலின் தாயார் பேஷன்ஸ் கூறுகையில், இது ஒரு சம்பிரதாயம்தான். திருமணத்தை நாங்கள் சட்டப்படி செய்யவில்லை, பதிவும் செய்யவில்லை. மேலும் செனேலும், ஹெலனும் ஒரே வீட்டில் வசிக்கவும் மாட்டார்கள் என்றார்.
இக்கருத்தை ஹெலனும் ஆமோதித்தார். அவர் கூறுகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்தால்தான் குடும்பம் செழிக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லாவிட்டால் செனேல் குடும்பத்துக்கு கெட்டது நடந்திருக்கும் என்றார்.
தனக்கு நடந்த திருமணம் குறித்து செனேல் கூறுகையில், கல்யாணம் நடந்தது சந்தோஷம்தான். ஆனால் நான் வளர்ந்து வாலிபனானதும் எனது வயதுக்கேற்ற இன்னொரு பெண்ணை மணந்து கொள்வேன் என்றான்.