கார் வாங்குவதை ஒத்தி வைக்கும் நடுத்தர வர்க்கத்தினர்: விற்பனை 12 ஆண்டுகளில் மாபெரும் சரிவு!
நாட்டில் நிலவும் தொடர் பொருளாதாரத் தேக்கம், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுகளே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் மொத்தம் 213,362 கார்கள் விற்பனையாயின. இந்த ஆண்டு இது 158,513 ஆக சரிந்துவிட்டது. கடந்த நான்கு மாதங்களாகவே கார்கள் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதும், 2000ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின் ஏற்பட்டுள்ள மாபெரும் சரிவு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் தொடர் சரிவை நோக்கிக் கொண்டு போய்க் கொண்டுள்ளதால், கார்கள் விற்பனை மேலும் சரியும் என்றே தெரிகிறது.
குறிப்பாக சிறிய ரக கார்களை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் கார்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். கார் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்து வருவதாலும், பணவீக்கம் அதிகரித்து விலைவாசி விண்ணை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாலும் நடுத்தர வர்க்கத்தினர் கார் கனவை ஒத்தி வைக்க ஆரம்பித்துள்ளனர்.
4 மாதங்களுக்கு முன் சில டீசல் கார் மாடல்களுக்கு மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது. இப்போது வாடிக்கையாளர்களுக்காக கார் டீலர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையடுத்து மாருதி, டாடா ஆகிய கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு வேகத்தை குறைக்க ஆரம்பித்துள்ளன.