மதவாத பாஜகவுடன் கூட்டணி சேரவே மாட்டோம்: ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் திட்டவட்டம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கி காங்கிரஸை பஞ்சராக்கினார் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் எம்பி, எம்எல்ஏ தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.
தனக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் தராததால் தான் அவர் தனிக் கட்சி தொடங்கினார். இதையடுத்து அவர் மீது வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கு பாய்ந்தது. சிபிஐ மூலம் ஜெகன்மோகன் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வைத்தது மத்திய அரசு.
இப்போதும் அவர் சிறையில் தான் உள்ளார். இந் நிலையில் தான் இடைத் தேர்தல்களில் வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்று காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.
இதையடுத்து அவரை தங்களது அணிக்குள் இழுக்க பாஜக முயன்று வருகிறது. குறிப்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில், எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாரான விஜயாம்மா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் ஆந்திரா சந்திக்கவுள்ள நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் விஜயாம்மா இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மதவாதக் கட்சியான பாஜகவுடன் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம். தேவைப்பட்டால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவோம். மூன்றாவது அணியில் கூட இணைவோம். ஆனால், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தரவே மாட்டோம். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
விஜயம்மாவின் இந்தக் கருத்து காங்கிரசுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. தங்களுடன் கூட்டணி சேராவிட்டாலும், பாஜகவுடன் அந்தக் கட்சி இணைந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினருடன் காங்கிரஸ் மறைமுக பேச்சு நடத்தி வந்தது. இந் நிலையில் தான் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார் விஜயாம்மா.
தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திராவில் காங்கிரசுக்கு பெரும் அடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியுடனான கூட்டணி மூலம் சரிவிலிருந்து தப்பிவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாநிலம் முழுவதுமே நல்ல ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் மத்தியில் ஆட்சிகளை நிர்ணயித்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பலம் நாளுக்கு நாள் கரைந்து கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் மேற்கொண்ட மாநிலம் தழுவிய நடைபயணத்தால் செருப்பு தேய்ந்தது மட்டுமே மிச்சம்!