தீவனம் போட்டு வளர்க்க முடியவில்லை... ஏலத்திற்கு வரும் 651 ஈமு கோழிகள்!
இந்தக் கோழிகள் அனைத்தும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை ஏலம் விடப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். முதல் நாளில் 651 கோழிகள் ஏலம் விடப்படவுள்ளன.
இதில் கிடைக்கும் வருவாயை, கோவை சிறப்பு கோர்ட்டில் டெபாசிட் செய்யவுள்ளனர். இதேபோல மேலும் பல ஏலம் நடத்தி அதன் மூலம் அனைத்து கோழிகளையும் ஏலத்தில் விட்டு விட தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி ஏலம் மூலம் கிடைக்கும் ஈமு கோழி மோசடித் திட்டத்தில் ஏமாற்றப்பட்டவர்களுக்கு கோர்ட் மூலம் பகிர்ந்தளிக்கப்படும். கிட்டத்தட்ட 12,000 ஈமு கோழிகள் தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஈமு கோழிப் பண்ணைகளில் இவை நிராதரவற்ற நிலையில் காணப்படுகின்றன. தீவனம் இல்லாமல் சாகும் நிலைக்கு இவை போய்க் கொண்டிருக்கின்றன. இதைப் பராமரிப்பது கஷ்டமாக இருப்பதால் தற்போது இவற்றை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது ஏலத்திற்கு வரும் 651 ஈமு கோழிகளும், பவானியில் உள்ள அலமு பண்ணை, பெருந்துறையில் உள்ள நிதி ஈமு கோழிப் பண்ணை மற்றும் பி.ஜி.புதூரில் உள்ள டிவிஎஸ் ஈமு பண்ணையைச் சேர்ந்தவையாகும்.
மொத்தம் உள்ள 12,000 ஈமு கோழிகளில் 7000 கோழிகள் சுசி ஈமு பண்ணையைச் சேர்ந்ததாகும். 2000 ஈமு கோழிகள் க்வீன் ஈமு பண்ணையைச் சேர்ந்தவையாகும். மீதமுள்ள 3000 கோழிகள் சிறு சிறு பண்ணைகளைச் சேர்ந்தவையாகும்.