4 அணைகளின் நீரை திறந்து விட்டு வற்றிப் போக செய்யும் கர்நாடகம்-பிரதமருக்கு ஜெ புகார் கடிதம்!
அந்தக் கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு கடந்த பிப்ரவரி 22ம் தேதி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்.
கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் உள்ள தண்ணீரை கோடை பாசனத்துக்கு திறந்து விட்டு வற்றிப் போக செய்கிறது.
பொதுவாக கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏப்ரல் 3வது வாரத்தில் இருந்து மழை பெய்ய தொடங்கி அணைகளுக்கு நீர்வரத் தொடங்கி விடும். ஆனால், கடந்த காலங்களிலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் மதித்ததில்லை.
கோடை பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தற்போதும் அதே நிலையை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை மட்டுமே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது அங்குள்ள அணைகளில் இருந்து கோடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.
எனவே, வரும் 2013 மே முதல் வாரம் முதல் கர்நாடகத்தின் நீர்ப் பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைக்கப் படவேண்டும். அதன்மூலம் 2013-2014ம் ஆண்டுக் காலத்தின் தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக அமையும். இதனால் 2013-2014ம் ஆண்டில் தமிழக நீர்ப்பாசனத்துக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என கருதுகிறேன்.
எனவே, இந்த சூழ்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தங்களின் சாதகமான முடிவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.