சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: 'நத்தத்தை' நம்பி பயனில்லையோ?!
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்டங்களை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். அதன் விவரம்:
- சென்னை மாநகராட்சியின் அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்படும். 109 நல்வாழ்வு மையங்களுக்கும் இன்வெட்டர்கள் பொருத்தப்படும். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சியின் அனைத்து கட்டிடங்களின் மேல்தளத்தில் சூரியசக்தி தகடுகள் படிப்படியாக 3 ஆண்டிற்குள் அமைக்கப்படும் (வரும் ஜூன் மாதம் முதல் மாநிலத்தில் மின்வெட்டே இருக்காது என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஜெனரேட்டர்கள் வாங்கவும் இன்வர்டர்கள் வாங்கவும் முடிவு செய்துவிட்டதன் மூலம் தமிழகத்தில் மின் வெட்டு இப்போதைக்கு தீராது என்பதை மாநகராட்சியே ஒப்புக் கொள்கிறது போலிருக்கிறது)
- மாநகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர்களின் கணினித் திறன் மேம்பட ஒரு கணினி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
- மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு மேலும் 10 மழலையர் பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும்.
- பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
- சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் உடல்களை எரிப்பது மற்றும் அடக்கம் செய்யப்படுவது முற்றிலும் இலவசமாக்கப்படும்.
- ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மருந்தகங்கள் அனைத்து மண்டலங்களிலும் ஆரம்பிக்கப்படும். 11 சித்தா மற்றும் 14 ஆயுர்வேதா மருந்தகங்கள் தொடங்கப்படும்.
- நகர்ப்புற வீடற்ற ஏழை மக்கள் தங்குவதற்காக செயல்பாடின்றி இருக்கும் சென்னை பள்ளிகள் மற்றும் கட்டிடங்களில் புதிதாக 15 இரவு நேர காப்பாகங்கள் மண்டலத்திற்கு ஒன்று வீதம் தொடங்கப்படும்.
- அனைத்து 24 மணி நேர மாநகராட்சி மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
- மெரினா கடற்கரையில் சைக்கிள்கள் செல்வதற்கு தனியாக மிதிவண்டி தடம் அமைக்கப்படும்.
- சென்னை மெரினா கடற்கரையை மேலும் அழகுப்படுத்தும் வகையில் இசை நீரூற்று அமைக்கப்படும்.
- பொது மக்களின் வசதி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் 15 மண்டலங்களில் உள்ள 640 கிலோ மீட்டர் நீளமுள்ள பேருந்து சாலைகளில் இரவு நேர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை கருதி ஒளிரும் மேலாடை வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலங்களில் 100 பூங்காக்கள் கூடுதலாக அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்.
- திருமலைபிள்ளை சாலை, மத்திய கைலாஷ், கோடம்பாக்கம் என்எஸ்கே சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டிடிகே சாலை புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கொன்னூர் நெடுஞ்சாலைகளில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவை அமைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் (ஆய்வு தான், பாலம்- சுரங்கப் பாதைகள் உடனே கட்டப்படப் போவதில்லை)
- பாரிமுனையில் ஆகாய நடைபாதை அமைக்கப்படும். மாம்பலம் ரயில் நிலையத்தையும், தி.நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கப்படும்.
- சென்னை அடையாறு மற்றும் கோட்டூர்புரத்திற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு திரு.வி.க. மேம்பாலத்தில் இருந்து கோட்டூர் மேம்பாலத்தை இணைக்கும் வகையில் புதிய இணைப்புச்சாலை அமைக்கப்படும்.
- நாய்கள் சரணாலயம் அமைக்கப்படும். செல்லப்பிராணிகளுக்காக தனி மயானம் அமைக்கப்படும்.
சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதியில் நடைபாதைகள் ஒழுங்குப்படுத்தப்பட்ட வாகன நிறுத்திமிடங்கள் உருவாக்கப்படும்.
- சர்வதேச சதுரங்க போட்டிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளி மாணவர்களுக்கிடையே கபடி போட்டி, ஓட்டப் பந்தயம் போன்ற போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.