பெருந்துறை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு: கிணற்றில் பிணமாக மிதந்த பனியன் கம்பெனி சூப்பர்வைசர்
ஈரோடு: பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தவர் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளிரவெளியைச் சேர்ந்தவர் ஹரி பாஸ்கர்(33). பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக இருந்தார். அவரது மனைவி சசிகலா(28). அவர்களுக்கு ஸ்ரீராம்(6) என்ற மகனும், பாவனா(4) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்ற அவர் மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீனாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றுக்கு சென்று மது குடித்துள்ளார். அப்போது பாஸ்கர், அவரது நண்பர்களுக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாஸ்கர் தரப்பை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடை எதிரே இருக்கும் தேட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஒருவர் பிணமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்து பெருந்துறை தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் கிடந்த உடலை கயிறு கட்டி வெளியே எடுத்து வந்தனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர். விசாரணையில் கிணற்றில் பிணமாகக் கிடந்தது ஹரி பாஸ்கர் என்று தெரிய வந்தது. டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் சில பொருட்கள் சேதமடைந்துள்ளது. அதற்காக ஹரியின் தந்தை டாஸ்மாக் கடைக்கு ரூ.2,000 கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் ஹரி காணாமல் போயுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
ஹரியின் மரணம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சீனாபுரம் பகுதியில் அவர்கள் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பின்னர் ஹரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஹரி கிணற்றில் பிணமாகக் கிடந்ததும், அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.