டெசோ பந்த்: ‘வெள்ளையன்’ எதிர்ப்பை மீறி கடைகள் மூடல்! வழக்கம் போல் இயல்பு வாழ்க்கை!!
டெசோ அமைப்பின் சார்பில் இன்றைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி கடந்த சில நாட்களாக திமுகவினர் துண்டு பிரசுரம் கொடுத்து வணிகர்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், வணிகர்களை கடையை மூட வேண்டும் என்று் யாரும் வற்புறுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தார். இதனால் இன்று கடைகள் அனேகமாக திறந்திருக்கும் என்றே சொல்லப்பட்டும் வந்தது. ஆனால் வெள்ளையனின் கருத்தை வணிகர்கள் எவரும் கண்டு கொள்ளாமல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பெரும்பாலான இடங்களில் முழு அளவில் கடைகளை மூடியிருந்தனர். புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த முழு அடைப்புப் போராட்டம் முழுமையாக நடைபெற்றது. பேருந்துகள் இங்கு இயக்கப்படவில்லை.
ஆனால் பேருந்துகள் பெருமளவு இயக்கப்பட்டன. திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிடர் கழக தொழிற்சங்கத்தினர் மட்டுமே பேருந்துகளை இயக்கவில்லை. இதேபோல் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கின. புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.
பொதுவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்கள் வெற்றி பெறுவது இல்லை என்றாலும் டெசோவின் இந்த போராட்டம், இன உணர்வு சார்ந்தது என்பதால் 50% அளவுக்கு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.