மதுரையில் இயல்பு நிலை -டெசோ பந்த்தால் பாதிப்பில்லை - 150 திமுகவினர் கைது
டெசோ நிறுவனம் விடுத்த அழைப்புக்கு மதுரையில் பெரிய அளவில் ஆதரவு கிட்டவில்லை. அங்கு கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. தொழில், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின.
ஒரு சில கடைகளை தவிர அனைத்து பகுதிகளிலும் கடைகள்,ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள் திறந்து இருந்தன. திமுக தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள் மட்டும் இன்று பணிக்கு வரவில்லை. ஆனாலும் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. திமுக தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்களை தவிர மதுரையில் 90 சதவீத ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக திமுக வட்ட செயலாளர் மூவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 12 பேரை கரிமேடு போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
அதேபோல மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட துணைச்செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ஜெயராமன், கோபிநாதன், ஒச்சுபாலு, ரவீந்திரன், தர்மலிங்கம், கவுன்சிலர்கள் நன்னா, அருண்குமார் உள்பட 150 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல அய்யர் பங்களாவில் புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி தலைமையிலும் மறியலில் ஈடுபட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பஸ்கள் அனைத்தும் ஓடியது. ஆட்டோக்களும் ஓடியது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
ராமநாதபுரம் பஜார் பகுதி, புதிய பஸ் நிலையம், ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை, ரயில் நிலையம் போன்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விருதுநகரில்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்பேல் ஓடின. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன. முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.