விரைவில் ரூ. 100 கோடி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மாநிலங்களவையில் இது குறித்து எழுத்துமூலம் கூறியுள்ளதாவது,
பிளாஸ்டிக் மற்றும் பாலிமரில் தயாரிக்கப்பட்ட 100 கோடி எண்ணிக்கையிலான 10 ரூபாய் நோட்டுகளைப் பரீட்சார்த்த அடிப்படையில் அறிமுகம் செய்ய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. இந்தப் பரீட்சார்த்த முயற்சி கொச்சி, மைசூர், புவனேசுவரம், சிம்லா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 நகரங்களில் மேற்கொள்ளப்படும். மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள் கொண்ட இந்த நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டுகள் நீண்ட காலம் சேதமடையாமல் இருப்பதற்கும், கள்ள நோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமே பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது''
மற்றொருமொரு பதிலில், "கடந்த 3 ஆண்டுகளில், பல்வேறு விதிமீறல்களுக்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு 50 எச்சரிக்கைக் கடிதங்களை செபி அனுப்பியுள்ளது. 5 புகார்களின் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
மற்ற கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துமூலம் மாநிலங்களவையில் அளித்த பதில்களில் தெரிவித்துள்ளதாவது:
மின்சார விற்பனை: எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜோதிராதித்ய சிந்தியா- 'மின்சாரத்தை விற்பனை செய்வதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட விலைக்கு மின்சாரத்தை வாங்குபவர்களைக் கண்டறிவது, சில புகுதிகளில் மின்வழித்தடப் பாதையில் உள்ள சிக்கல்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே மின் பற்றாக்குறை உள்ளது.
மின் தேவை மற்றும் மின்சாரம் கிடைக்கும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து பற்றாக்குறையின் அளவு மாறுபடுகிறது. சில மாநிலங்களில் சில நேரங்களில் உபரி மின்சாரமும் இருக்கிறது' என்று தெரிவித்தார்.
வருமான வரி பாக்கி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் -' கடந்த 2012ஆம் ஆண்டின் இறுதியில் அரசுக்கு வரவேண்டிய ஒட்டுமொத்த வருமான வரி பாக்கி ரூ.4,18,696 கோடியாக உள்ளது. இதில், ஹசன் அலி கான் செலுத்த வேண்டிய ரூ.1,16,773 கோடி, சந்திரிகா தபூரியா ரூ.47,040 கோடி, மறைந்த ஹர்ஷத் மேத்தா செலுத்த வேண்டிய ரூ.17,050 கோடி ஆகியவையும் அடங்கும். வருமான வரி பாக்கியை வசூலிப்பதைக் கவனித்துக் கொள்வதற்காக அரசு ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பெட்ரோலியத்துறை : அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி கூறிய பதிலில்- 'கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையில் எரிவாயு உற்பத்தியை வேகமாகத் தொடங்க, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத சாதனங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் - 'பொதுத்துறை நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு நெறிமுறைகளை அரசு இறுதி செய்துள்ளது. இந்த நெறிகளின்படி, நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியைச் சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டார்.