5 இலைகள் தான் உதிர்ந்துள்ளன; ஆனால் தேமுதிக என்பது ஆலமரம்: பிரேமலதா
தேமுதிக மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசிய பிரேமலதா, பெண்ணாகப் பிறப்பதே மகா தவம் என்று கூறுவதுண்டு. ஆனால் இப்போது நாம் பெண்களாக ஏன் பிறக்க வேண்டும் என்று சிந்திக்கக்கூடிய அளவில் கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வினோதினி முதல் வித்யா வரையிலான பெண்கள் மீது ஆசிட் வீச்சு நடந்துள்ளது.
பள்ளிச் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் மது விற்பனை தான்.
கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களுக்கு அடிப்படையாக இருப்பதும் டாஸ்மாக் தான். டாஸ்மாக் மதுக்கடைகளை கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு சம பங்கு உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது.
டாஸ்மாக் மது கடைகளை மூடினால் தமிழகத்தின் ஒட்டு மொத்த வருமானம் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் எப்படி பூரண மது விலக்கை அமல்படுத்தினார்கள்?
தமிழகத்தில்தான் அதிக இளம் விதவைகள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதற்குக் காரணம் டாஸ்மாக் தான்.
ஓட்டுக்காக காசு கொடுக்க யார் வந்தாலும் நீங்கள் ஏமாறாதீர்கள். இலவசம் என்ற பெயரில் ஓட்டுகளை வாங்கும் அதிமுக, திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தேமுதிக எம்.எல்.ஏக்களை அதிமுகவில் சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். தேமுதிகவில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் விலகிவிட்டால் கட்சியே அழிந்து விட்டதாக அர்த்தமல்ல. சட்டசபையில் பல கட்சிகளைச் சேர்ந்த எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எல்லாம் இவர்கள் கண் படவில்லை. தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது மட்டும் கண் படுகிறது. இது தேமுதிகவின் வளர்ச்சியை காட்டுகிறது.
5 எம்.எல்.ஏக்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். ஆனால் 50 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கோடை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம் போன்ற காலங்கள் உள்ளது போல இப்போது இலையுதிர் காலம். அதனால் 5 இலைகள் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது.
அந்த 5 தொகுதி மக்களுக்கு சொல்கிறேன். உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்களையும் அவர்கள் விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் பிரேமலதா.