கள்ளத்தொடர்பு-இன்ஸ்பெக்டர், பெண் எஸ்ஐ மீது வழக்கு பதிவு
நெல்லை: கள்ள தொடர்பை கண்டித்த மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திசையன்விளை இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் எஸ்ஐ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்நதவர் முருகன். இவருக்கு முத்துவேல் நாச்சியார் என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த பெண் எஸ்ஐ ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக டிஐஜி சுமித் சரண், எஸ்பி விஜேந்திர பிதாரிக்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்துக்கும், பெண் எஸ்ஐ தூத்துககுடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டாலும், செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். இதை அறிந்த அவரது மனைவி முத்துவேல் நாச்சியார் முருகனை கண்டித்துவந்துள்ளார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் முத்துவேல் நாச்சியார் எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் புகார் செய்தார். எஸ்பி இன்ஸ்பெக்டரை அழைத்து விளக்கம் கேட்டு எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் செல்போன் அழைப்பு வந்ததை அவரது மனைவி முத்துவேல் நாச்சியார் எடுத்து பார்த்துள்ளார். இதையறிந்த முருகன் எப்படி என் செல்போனை எடுக்கலாம் என கூறி தகராறு செய்து ,தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துவேல் நாச்சியார் வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து முருகன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த பெண் எஸ்ஐ மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.