தெரு நாய் கடித்து சிறுமி படுகாயம்: அரசு செலவில் அப்பல்லோவில் பிளாஸ்டிக் சர்ஜரி- ஜெ. உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரம் வள்ளி நகரில் வசிக்கும் சரவணன் என்பவரின் 4 வயது மகள் தனபிரியா, பள்ளிக்கூடம் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள தெரு நாய் ஒன்று அச்சிறுமியின் தலையிலும், கன்னத்திலும் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.
இந்தச் செய்தியை அறிந்த முதுல்வர் ஜெயலலிதா, அச்சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலும் பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முக சீரமைப்பு சிகிச்சை அளிக்கவும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திட உத்தரவிட்டார்.
அத்துடன் சிறுமி தனபிரியாவிற்கு அளிக்கப்படும் இந்த சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறைச் செயலாளர் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி தனபிரியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, சிறுமி தனபிரியாவிற்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்திடுமாறு மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
தெரு நாய்களால் ஏற்படும் இத்தகைய சம்பவங்களைத் தடுத்திடும் வகையில், நகராட்சி நிர்வாகத் துறை, புளு கிராஸ் சங்கத்துடன் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் மனிதாபிமானத்துக்கு நமது சல்யூட்!
இந் நிலையில் சென்னையில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தும் பொருட்டு, புதியதாக எட்டு நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு 11.03.2013 முதல் நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் 121 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் நலன் கருதி 15 மண்டலங்களிலும் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் நாய் பிடிக்கும் வாகனங்களை பணியில் ஈடுபடுத்தி தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.