'வல்லவன்' பட ஸ்டைலில் காதல்: நாகையில் கல்லூரி விரிவுரையாளரை கடத்திய மாணவன்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலியான கல்லூரி விரிவுரையாளரை மாணவர் ஒருவர் வீடு புகுந்து கடத்திச் சென்றுள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ள இரைச்சல்குளத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த கவுதம்(20) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பவர் கருங்கல்லைச் சேர்ந்த ஜாஸ்மின் சுஜி(24). கவுதமும், ஜாஸ்மினும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
அவர்கள் பல இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளனர். இந்த காதலுக்கு ஜாஸ்மினின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடி கடந்த 8ம் தேதி ஓட்டம் பிடித்தது. பெற்றோர் தங்களை தேடும் விவரம் அறிந்து வீட்டுக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் கவுதம் நேற்று அதிகாலை தனது சக மாணவர்கள் சில பேருடன் சேர்ந்து டாடா சுமோ காரில் ஜாஸ்மின் வீட்டுக்கு வந்தார். ஜாஸ்மினின் பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காதலியை கடத்திச் சென்றார். அரிவாள் வெட்டு பட்ட ஜாஸ்மினின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.