லயோலா கல்லூரி மாணவர்களை சந்திக்கும் முடிவில் இருந்து ஜகா வாங்கிய யுவராஜா!
இலங்கை அரசைக் கண்டித்தும், அதன் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் லயோலா கல்லூரி மாணவர்கள் திலீபன், ஜோசப் பிரிட்டோ, பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், அந்தோணி ஜார்ஜ், லியோ ஸ்டாலின் ஆகிய 8 மாணவர்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் உள்ள செங்கொடி அரங்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினரும் அவர்களை சந்தித்து ஆகரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் முன்னாள் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மாணவர்களை சந்திக்க விரும்பி அங்கு செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் உண்ணாவிரத இடத்திற்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போனபோது அங்கு மோதல் மூண்டது. அப்போது நடந்த கல்வீச்சில் தங்கபாலு தாக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன் என்பவரது தலையில் கல் பட்டதில் ரத்தம் கொட்டியது. இந்த தகவல் அறிந்த யுவராஜா அங்கு சென்றால் சூழ்நிலை சரியாக இருக்காது என கருதி செல்லாமல் தனது முடிவை மாற்றிக் கொண்டாராம்.
மாணவர்கள் போராட்டத்தின் போது அங்கு செல்ல வேண்டாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும், உளவுத்துறை போலீசாரும் வலியுறுத்தியதன் பேரில் தான் யுவராஜா யூ டர்ன் எடுத்துவிட்டாராம்.