இறுதிச் சடங்கில் சவேஸின் அம்மாவை கட்டிப்பிடித்ததால் பிரச்சனையில் ஈரான் அதிபர்
வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சவேஸின் இறுதிச் சடங்கில் ஈரான் அதிபர் மகமூத் அகமதினிஜாத் கலந்து கொண்டார். அப்போது அவர் சவேஸின் தாயை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ஈரான் மத குருமார்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஈரானில் உள்ள கோம் இஸ்லாமிய மைய மத குருமார்கள் அதிபரின் செயலை தடை செய்யப்பட்ட, பொருத்தமற்றது என்று தெரிவித்ததாக அந்நாட்டு செய்தித் தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டு இஸ்லாமிய விதிமுறைகளின்படி சம்பந்தமில்லாத ஆணையோ, பெண்ணையோ கட்டிப் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர அகமதினிஜாத் வெனிசுலா மக்களுக்கு எழுதிய ஆறுதல் கடிதத்திற்கு இஸ்லாமிய மத குருமார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த கடித்தத்தில் அவர், சவேஸ் ஒரு தியாகி என்றும் அவர் மீண்டும் உயிர் பெற்று இயேசு மற்றும் இமாம் மஹ்தியுடன் சேர்ந்து பூமிக்கு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் மஹ்தி ஷியா முஸ்லீம்களால் மதிக்கப்படும் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் ஆவார்.