புதிய போப் தேர்வாகவில்லை: 'கரும் புகையே' வெளியானது!- உலகின் கண்கள் புகை போக்கி மீது!
வாடிகன்: புதிய போப்பாண்டவரை தேர்வு செய்வதற்காக நடந்த முதல் நாள் ஓட்டெடுப்பு தோல்வி முடிந்தது.
போப் ஆண்டவராக பொறுப்பு வகித்த ஜெர்மனியைச் சேர்ந்த 16ம் பெனடிக்ட் பதவி விலகியதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வாடிகன் நகரில் தொடங்கியுள்ளது.
115 பேரில் ஒருவர் தான் போப்:
இதில் புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கு தகுதியான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 115 கார்டினல்கள் கலந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். இந்த 115 பேரில் ஒருவர் தான் அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
மீண்டும் மீண்டும்...:
இந்த 115 பேரும் ஒரு ரகசிய அறையில் அமர்ந்து அடுத்த போப் ஆண்டவராக யாரைத் தேர்வு செய்யலாம் என ரகசிய வாக்களிக்க வேண்டும். நாள் முழுவதும் வாக்களிப்பு முடிந்தவுடன் மாலையில் யார் அதிக வாக்குகள் பெற்றனர் என்பது கணக்கிடப்படும். இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் வாக்களிப்பு நடக்கும்.
வாக்கு சீட்டுகள் எரிப்பு:
ஒரு வாக்குச் சீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை கார்டினல்கள் எழுதுவார்கள். முடிவில் 3-ல் 2 பங்கு வாக்கைப் பெறுகின்ற கார்டினலே புதிய போப் ஆண்டவராவார். எவருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அனைத்து வாக்கு சீட்டுகளும் சேகரிக்கப்பட்டு எரிக்கப்படும்.
கருப்பு புகை:
அப்போது அந்த அறையின் மேலுள்ள புகை குழாய் வழியாக கரும் புகை வெளியேறும். போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் புகை குழாய் வழியே வெண்புகை வெளியேற்றப்படும். அவ்வாறு வெண் புகை வெளியேறினால் புதிய போப் ஆண்டவர் தேர்வாகிவிட்டார் என்று அர்த்தம்.
வாடிகன் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமையில் இந்த வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
2 ஆண்டு கூட ஆனதாம்...:
ஒரு முறை போப் ஆண்டவரை தேர்வு செய்ய 2 ஆண்டுகள் வரை வாக்கெடுப்பு நடந்ததாம். அப்போது வெறுத்துப் போன மக்கள் கார்டினல்கள் தங்கியிருந்த அறைக்குச் செல்லும் உணவுத் தடுத்துவிட்டார்களாம். வெறும் பிரட்டும் தண்ணீரும் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாம். அப்படியாவது விரைவில் அடுத்த போப் ஆண்டவரை இவர்கள் தேர்வு செய்யப்பட்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.
அதே போல ஒரு முறை இரண்டே நாட்களில் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது.
இந்த முறை முதல் நாளில் போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படவில்லை. தொடர்ந்து இன்றும் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
இந்தியாவிலிருந்து 5 கார்டினல்கள்:
ஆரம்பகாலத்தில் ரோம் நகர மக்கள், கார்டினல்கள், பிஷப்கள் அனைவரும் சேர்ந்து போப் ஆண்டவரை தேர்வு செய்து வந்தனர். பின்னர் காலப் போக்கில் அது கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்கும் முறைக்கு மாறிவிட்டது.
இந்த முறை போப் ஆண்டவர் தேர்வில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து 5 கார்டினல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னணியில் கனடாவின் மார்க் ஓலெட்:
இதற்கிடையே, போப் ஆண்டவராக தேர்வு பெறுவர்களில் மார்க் ஓலெட்டுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. கனடாவை சேர்ந்த இவர் பதவி விலகிய பெனடிக்டுக்கு மிகவும் நெருக்கமானவர். லத்தீன் அமெரிக்காவில் போப் ஆண்டவர் கமிஷனின் தலைவராக உள்ளார்.
இவரை தவிர தாமஸ் நோவின்ஸ், மிலனை சேர்ந்த ஏஞ்சலோ ஸ்கோலா, பிரேசிலின் ஓடிலோஸ் கெரர், புடோபெஸ்டை சேர்ந்த பீட்டர் எர்டோ, வியன்னாவைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஸ்கோயன் பார்ன், மெக்சிகோவின் குயடலா ஜராவின் ஜோல், பிரான்சிஸ்கோவின் ரோல்ஸ் ஓர்டெகா, நியூயார்க்கின் டிமோதி டோலன், மணிலாவின் லூயிஸ் அந்தோனியோ, தென் ஆப்பிரிக்காவின் வில்பாரட் நேப்பியர் ஆகிய 9 பேரும் புதிய போப் ஆண்டவர் ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.