மாஜி காதலரின் நெஞ்சில் குத்திய ஜெனீபர் கேப்ரியாட்டி... கைதாகும் அபாயம்
டென்னி்ஸ் அரங்கில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் ஜெனீபர். முதல் நிலை வீராங்கனையாகவும் திகழ்ந்தவர். 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 14 பட்டங்ளையும் வென்றுள்ளார். 1992ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றவர்.
தற்போது ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் ஜெனீபர். இவருக்கும், முன்னாள் காதலர் இவான் பிரானன் என்பவருக்கும் இடையே கடந்த பிப்ரவரி 14ம் தேதி புளோரிடாவின் நார்த் பாம் பீச் பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் வைத்து வாக்குவாதம் மூண்டது. அப்போது இவானை தாக்கி விட்டார் ஜெனீபர் என்று தெரிகிறது.
இவான் நெஞ்சில் நான்கு முறை தனது கையால் குத்தினாராம் ஜெனீபர். இதையடுத்து அங்கிருந்த ஒரு யோகா பயிற்சியாளர் ஜெனீபரைத் தடுத்து மேலும் தாக்காமல் தடுத்தார். இதுகுறித்து இவான் போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.
இதையடுத்து போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கேப்ரியாட்டி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்ரியாட்டியும்,இவானும் 2011 மே முதல் 2012 பிப்ரவரி வரை காதலித்தனர். அதன் பின்னர் பிரிந்து விட்டனர்.
ஆனால் தான் இவானை தாக்கவில்லை என்று டிவிட்டரில் கூறியுள்ளார் கேப்ரியாட்டி. இதுகுறித்து அவர் எழுதுகையில், நான் இவானை தாக்கவில்ல. என்னை வார்த்தையால் திட்டியபடி நெருங்கி வந்த அவரை நான் தள்ளி விட்டேன். அதையும் கூட தற்காப்புக்காகத்தான் செய்தேன். அந்த நபர்தான் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசி வருகிறார். உண்மையே வெல்லும் என்று கூறியுள்ளார் கேப்ரியாட்டி.
கேப்ரியாட்டிக்கு சர்ச்சைகள் புதிதல்ல. பலமுறை பிரச்சினைகளில் சிக்கியவர்தான். 1994ம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சிக்கினாரர். பின்னர் தற்கொலைக்கும் முயன்றார். இப்போது முன்னாள் காதலரின் நெஞ்சில் குத்தி சிக்கலில் மாட்டியுள்ளார்.