தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், பெமினா பகுதியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் திடிர் தாக்குதல் நடத்தியதில், மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாள் உயிரிழந்தார். பெருமாளின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" தமிழகத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாள், தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தீடிர் தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொனாத் துயரமும், மிகந்த மன வேதனையும் அடைந்தேன். தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பெருமாளின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமாளின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும் பெருமாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
பெருமாளின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்", இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.