மாலுமிகள் விவகாரம்: இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு வெளியேறிவிடாமல் இருக்க ஏர்போர்ட்டுகள் உஷார்
கடந்த ஆண்டு கேரள கடல் பகுதியில் மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டேனியல் மான்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் மான்சினி நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கொலை குற்றம்சாட்டப்பட்ட மாலுமிகள் மாசிமிலியானோ லாடோர் மற்றும் சால்வடோர் கிரோன் ஆகியோர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிவிட்டு, இத்தாலி நாட்டு தேர்தலில் வாக்களித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பிவிடுவார்கள் என்று மான்சினி உச்ச நீதிமன்றத்திற்கு தனது கைப்பட எழுதிக் கொடுத்தார். ஆனால் இத்தாலி அரசு அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப முடியாது என்று கடந்த திங்கட்கிழமை தெரிவித்தது.