பலூனில் பறந்து கொண்டே தாஜ்மகாலை ரசிக்கலாம்
ஆக்ரா: தாஜ்மகாலை அருகில் சென்று ரசிப்பது தனி அழகு. தூரத்தில் துணையுடன் அமர்ந்து மணிக்கணக்கில் ரசிப்பது தனி அழகு. உலக அதிசயமாகவும், காதலின் சின்னமாகவும் கொண்டாடப்படும் அழகான அந்த காதல் சின்னத்தை ஆகாயமார்க்கமாக பறந்த படி பார்த்து ரசிக்க வசதி செய்துள்ளனர்.
தாஜ்மகாலின் உள்ளே நுழைந்து ரசிக்க இந்திய பயணிகளுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சார்க் மற்றும் BIMSTEC நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 510 ரூபாயும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 750 ரூபாயும் கட்டணம் உள்ளது.
இனி பறந்தபடி பார்க்கலாம்
நடந்து சென்று ஒவ்வொரு இடத்தையும் பார்த்து ரசித்தவர்கள் தற்போது 50 மீட்டர் விட்டமுடைய ஹீலியம் வாயு பலூனில் ஆகாயத்தில் பறந்தவாறு தாஜ்மஹாலின் அற்புத அழகை கண்டு ரசிக்கலாம்.
15 நிமிடத்திற்கு ரூ. 500
ஆகாயத்தில் இருந்து தாஜ்மஹாலின் அழகை 15 நிமிடம் கண்டுகளிக்க உள்ளூர் பார்வையாளரிடம் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராத்திரி சவாரிக்கு தனி ரேட்
அதேசமயம் இரவு நேர சவாரிக்கு உள்ளூர் பார்வையாளர்களுக்கு ரூ.750, வெளிநாட்டவர் ரூ.2000 கொடுக்கவேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
500 மீட்டர் உயரத்தில்
இந்த ஹீலியம் பாலூனானது 500 மீட்டர் உயரத்தில் பறந்து தாஜ்மஹாலின் அழகை கண்டுரசிக்க ஏற்றவாறு 2-கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து இயக்கப்படும் என்று காலக்கிருத்தி மையம் தெரிவித்துள்ளது.
தாஜ் புகழ் பரப்ப தனி இணையம்
ஏற்கனவே தாஜ்மகாலின் புகழினைப் பரப்பவும், அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் உத்தரபிரதேச சுற்றுலாத்துறையால் http://tajmahal.gov.in/home.html என்ற அதிகாரப்பூர்வமாக இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தாஜ்மகால் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் போட்டோவாகவோ, வீடியோவாகவோ அதில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்ற வரவேற்பினை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிலும் செய்யலாமே..
தற்போது இந்த ஆகாயமார்க்க தரிசனமும் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளலாமே?