வரதட்சணை கொடுமை வழக்கு: ஒரிசா சட்ட அமைச்சர் ரகுநாத் மொகந்தி ராஜினாமா
ஒரிசா மாநில சட்ட அமைச்சராக இருந்தவர் ரகுநாத் மொகந்தி. அவரது மருமகள் பர்ஷா சோனி மொகந்தி நேற்று இரவு பலசூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், ராஜஸ்ரீக்கும் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர்கள் சீர்வரிசையுடன் ரூ.10 லட்சமும் கொடுத்தனர். ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு என்னை மாமனார் ரகுநாத் மொகந்தி, மாமியார் பிரீத்திலதா, கணவர் ராஜஸ்ரீ மற்றும் குடும்பத்தார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். ஒரு ஸ்கார்பியோ காரும், ரூ. 25 லட்சம் ரொக்கமும் வாங்கி வருமாறு என்னை கொடுமைப்படுத்தினர் என்று தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ரகுநாத் மொகந்தி இன்று காலை ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவர் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவர் தன் மீதும், தனது குடும்பத்தார் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றார்.
இதற்கிடையே பர்ஷா தனது பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 13ம் தேதி தன்னை கடத்தி, கொல்ல முயற்சி நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.