கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
கோப்ராபோஸ்ட் என்ற இணைய இதழ் ஆபரேஷன் ரெட் ஸ்பைடர் என்ற பெயரில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த இணைய இதழின் செய்தியாளர், ஐசிசிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகளின் பல்வேறு கிளைகளை அணுகியிருகின்றனர். அப்போது அவர், அரசியல்வாதி ஒருவரின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டும் என்று கேட்கின்றார். இதை கேட்டுக் வங்கி நிர்வாகிகளே எப்படி பல லட்சம் ரூபாய் கருப்பு பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்கிறார்கள் என்பதையும் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
இதில், வங்கிகளின் பல்வேறு கிளைகளுக்கு கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர்கள் சென்று, மேலாளர் உள்பட மூத்த அதிகாரிகளிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கருப்பை வெள்ளையாக மாற்றுவது ஈசி. ஆனால், இதை 5 கணக்குகளில் பிரித்து போட வேண்டும் என்றும் பினாமி பெயர்களில் கணக்கு துவக்குவது பற்றியும் விலாவாரியாக ஆலோசனைகளை அள்ளி வீசுவது போன்ற ஏராளமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இது பற்றி கோப்ரா போஸ்ட் ஆசிரியர் அனிருதா பாகல் கூறுகையில், சுவிஸ் வங்கிகள் போல இந்த வங்கிகள் செயல்படுகின்றன. எங்கள் செய்தியாளர் ஏகப்பட்ட கிளைகளுக்கு சென்று இதை படம்பிடித்துள்ளார் என்றார். சுவிஸ் வங்கி போல் கருப்பு பணத்தை அனுமதிப்பது நிதிமோசடி சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின்படி கடுங்குற்றமாகும்.
இந்த வீடியோ பற்றி நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ‘இதை 2 வங்கிகள் மறுத்துள்ளன. அரசு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராது என்றார். எனினும், இந்த வங்கிகளின் பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்கவுள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் விசாரணைக்கு உத்தரவு
நிதிமோசடி குற்றச்சாட்டை 3 தனியார் வங்கிகளும் மறுத்துள்ளன. தங்கள் வங்கியில் ஏஎம்எல், கேஒய்சி விதிகளை முழுமையாக பின்பற்றப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் கூறியுள்ளன. எனினும், இது பற்றி 2 வாரத்துக்குள் விசாரணை நடத்தி, உண்மை நிலையை வாடிக்கையாளர்களுக்கும் பங்கு முதலீட்டாளர்களுக்கும் தெரிவிப்பதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கிகளும் விசாரணை நடத்துவதாக தெரிவித்திருக்கின்றன.