விசாரணைக்கு எதிர்ப்பு- மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதி
நெல்லை: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பாளை மத்திய சிறையில், மரத்தில் ஏறி கைதி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்தவர் ராஜமோகன். இவர் ஒரு வழக்கில் விசாரணை கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து நி்ர்வாக காரணங்களுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பாளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். வழக்கு தொடர்பாக இவரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜர்படுத்தாமல், வீடியோ கான்பிரான்சிங் மூலம் வாய்தா பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜமோகன், சிறை வாளகத்தில் உள்ள மரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யகொள்ள போவதாக மிரட்டினார். ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அடுத்த முறை வாய்தாவின் போது கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
இதையடுத்து மரத்தில் இருந்து கீழே இறங்கிய ராஜமோகனை பிடித்து சிறை அதிகாரிகள் மற்றும் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பரபரப்பபை ஏற்படுத்தியது.