சாவேஸ் மரணத்தில் சந்தேகம்? விஞ்ஞானிகள் ஆய்வுக்கு வெனிசுலா அரசு உத்தரவு
கரகாஸ்: புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலா நாட்டின் அதிபராக 14 ஆண்டுகள் பதவி வகித்து, உலக அரசியல் அரங்கில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த புரட்சியாளர் ஹியூகோ சாவேஸ் கடந்த 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
நான்கு முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், அவரால் உயிர் பிழைக்க முடியவில்லை. இனி உயிர் பிழைக்க முடியாது என உணர்ந்தபோதே, சாவேஸ், தனது அரசியல் வாரிசாக துணை அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோவை அறிவித்தார். அதன்படி, சாவேஸ் மரணத்தை தொடர்ந்து அவர் தற்காலிக அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வெனிசுலாவில் அடுத்த மாதம் 14-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சோஷலிச கட்சி சார்பில் போட்டியிடும் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து, எதிர்க்கட்சியான ஜனநாயக ஐக்கிய கூட்டணி வேட்பாளராக 40 வயது கேப்ரைல்ஸ் களம் இறங்கியுள்ளார். இரு தரப்பிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
சாவேஸ் மரணத்தில் சந்தேகம்
அதிபர் சாவேஸ் மரணத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாவேஸ் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளானதற்கு வெளிநாடுகளில் உள்ள அவரது எதிரிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக டெலிவிஷன் சானல் ஒன்றுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ அளித்த பேட்டியில், ‘‘அவரது எதிரிகள்தான் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உடல்நலத்தை சீர்குலைத்து விட்டனர். பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்துக்கு இஸ்ரேலிய எதிரிகள் விஷம் கொடுத்தது போலத்தான் சாவேசுக்கும் நடந்துள்ளது'' என கூறினார்.
அமெரிக்காவாக இருக்கலாம்
சாவேஸ் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாக யார் காரணம் என நேரடியாக அவர் குற்றம் சாட்டாவிட்டாலும்கூட, ‘‘நோய்களை உருவாக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த சோதனைக்கூடங்கள் அமெரிக்காவில் உள்ளன'' என குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளுக்கு அழைப்பு
சாவேசுக்கு எப்படி அந்நோய் தாக்கியது என்பதை கண்டறிய அதிபர் பதவி வகிக்கும் நிகோலஸ் மதுரோ, உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சவேஸ்க்கு சந்தேகம்
2011ஆம் ஆண்டு புற்று நோய் தாக்கிய சாவேசுக்கே இந்த சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் குழப்பம்
மக்கள் மத்தியிலும் சாவேஸின் உடல்நிலை குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி இது என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
உடல் அடக்கம் செய்யப்படுமா?
இதற்கிடையே சாவேஸ் உடலை தேசிய பாந்தியன் கட்டிட வளாகத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக வெனிசுலாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வெனிசுலா பாராளுமன்றத்தில் இந்த வாரம் விவாதம் நடக்கிறது.