நாமக்கல்லில் அதிரடி- பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பாளர்கள் 1300 பேர் அதிரடி இட மாற்றம்
நாமக்கல்: நாமக்கல்லில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது அம்பலமானதையடுத்து 1300 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 11-ந்தேதி நடந்த இயற்பியல் தேர்வில் நாமக்கல் அருகே ஒரு தனியார் பள்ளியில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை மாணவர்களுக்கு அட்டையில் எழுதி காட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய முக்கிய தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இத் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெற கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து 3-வது முறையாக தலைமை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட 30 முதன்மை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு வேறு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டம் முழுவதும் அறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 1300 ஆசிரிய, ஆசிரியைகளை வேறு மையங்களுக்கு மாற்றி நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.