வினோதினி கொலை வழக்கு: 232 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
நாகை மாவட்டம் திருக்கடையூர் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோதினி. இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இதற்காக காரைக்கால் எம்.எம்.ஜி நகரில் குடியேறினர்.
படிப்பை முடித்த வினோதினி சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (28) என்ற கட்டிடத் தொழிலாளி ஒருதலையாக காதலித்தார். இதை வினோதினி ஏற்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த வினோதினி நவம்பர் 14ம் தேதி இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, சாலையோரம் மறைந்திருந்த சுரேஷ், வினோதினி மீது ஆசிட் வீசி விட்டு ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த வினோதினி இரண்டு கண்களிலும் பார்வை இழந்தார். சென்னை தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 11ம் தேதி இறந்தார்.
ஏற்கனவே ஆசிட் வீசியது தொடர்பாக சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். நேற்று அவர் மீது 232 பக்க குற்றப்பத்திரிகையை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.