வாணியம்பாடி: பிளஸ்-1 மாணவன் கடத்தி கொலை... கல்லூரி மாணவர் உட்பட 8 பேர் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ப்ளஸ் 1 மாணவனை பணத்திற்காக கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் நகை கடை அதிபர் இவரது மகன் மணி (வயது17), இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு சென்ற மணி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடினர்.
இந்த நிலையில் ரமேஷுக்கு மர்மபோன் ஒன்று வந்தது. அதில் மகனை கடத்தியிருப்பதாகவும், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால் அவரை விடுதலை செய்வதாகவும் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி. மாணிக்கம், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட மாணவனை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவனை தேடி வந்தனர். ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது நகை கடை அதிபர் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஜெகன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ஜெகன் 8 பேர் கும்பலுடன் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது. மேலும் மாணவர் மணியை அடித்து கொலை செய்து மின்னூரில் உள்ள ஒரு கிணற்றில் பிணத்தை வீசியது தெரியவந்தது. உடனடியாக மின்னூருக்கு சென்ற போலீசார், அங்குள்ள கிணற்றில் மாணவன் மணி சடலமாக கிடந்ததை கண்டனர். மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஜெகன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகன் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி மாணவர் ஒருவர் 80 லட்சம் பணத்திற்காக பிளஸ்-1 மாணவனை கடத்திக் கொலை செய்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.