இரு குழந்தைகளின் தாயான மகள் வேறொருவருடன் ஓட்டம்: அவமானத்தில் தாய் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர்: இரு குழந்தைகளின் தாயான, தனது மகள் வேறொரு நபருடன் ஓடிவிட்ட அவமானம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மலையாண்டி மனைவி அம்மாபொன்னு (50). இவரது மகள் கலாவதி. ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் தாயான கலாவதி சமீபத்தில் வேறொரு நபருடன் ஓடிவிட்டார்.
துக்கத்துடன் அவமானமும் தாக்க, அம்மாபொன்னு 4 நாட்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சுகமடைந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வீட்டிற்கு வந்த அம்மாபொன்னு, துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.