அடிக்கடி மிரட்டி உறவு, திருமணத்திற்கு மறுப்பு, அடியாட்களுடன் வந்து தாக்குதல்!
சென்னை: சென்னை அருகே பொன்னேரியில் 40 வயதுப் பெண்ணை மோசடியாக ஏமாற்றி அடிக்கடி உறவு கொண்டு விட்டு திருமணம் செய்ய மறுத்து பின்னர் அடியாட்களுடன் போய் அந்தப் பெண்ணைத் தாக்கிய நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரியைச் சேர்ந்தவர் சுகந்தி. 40 வயதான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நானும், பொன்னேரியில் வசிக்கும் திருநாவுக்கரசு (44) என்பவரும் கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். திருநாவுக்கரசு கடந்த 5 வருடங்களாக அடிக்கடி எனக்கு போன் செய்து, என்னை காதலிப்பதாக தொல்லை கொடுத்தார்.
நான் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி, என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார்.
அதன்பின்னர் அடிக்கடி எனக்கு ஒரு மாத்திரையை கொடுத்து என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். நான் திருமண பேச்சை எடுத்தால் தட்டிக்கழித்து விடுவார். பின்னர் 5 மாதமாக என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் என் வீட்டிற்கு வந்தவர், உன்னை திருமணம் செய்வதில் சிக்கல் உள்ளது. நீ வேறு யாரையாவது திருமணம் செய்துக்கொள். அதற்கு ஆகும் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு நான், எதிர்ப்பு தெரிவித்தேன். உன்னால்தான் என் வாழ்க்கை பாழானது. நீ எனக்கு நம்பிக்கை மோசடி செய்தால் போலீசில் புகார் செய்வேன் என்றேன். இதனால் அடியாட்களுடன் என் வீட்டுக்கு வந்த அவர், என்னை அடித்து உதைத்ததுடன், போலீசுக்கு போனால் உன்னையும், உன் குடும்பத்தையும் சாகடித்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
எனவே ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த திருநாவுக்கரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசுவைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.