மின்னல் தாக்கி பத்மநாபசாமி கோவில் சிசிடிவி கேமராக்களில் 32 எரிந்து நாசம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மின்னல் தாக்கியதில் எரிந்து நாசமாகின.
பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்ககப்பட்டதால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்பட பாதுகாப்பு கருவிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி மொத்தம் 59 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவிலின் வெளிப்புரத்தில் பொருத்தப்பட்டிருந்த 32 கேமராக்கள் எரிந்தன. இந்த சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேமராக்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.