இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருமா?... வராதா?
''ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப் படுகொலைகள் என்று பிரகடனப்படுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்பது திமுகவின் முக்கிய நிபந்தனையாகும்.
இந் நிலையில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் டெல்லியில் நிருபர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்,
நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதனால், அவர்களுடன் பேசி ஒருமித்த கருத்தை உருவாக்க முடியுமா என்று மத்திய அரசு 'ஆய்வு' செய்து வருகிறது. பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமல், ஒருமித்த கருத்து இல்லாமல் இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.
நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சரத்பவாரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதையே காரணமாகக் காட்டி, ஒருமித்த கருத்து இல்லை என்று கூறிவிட்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தையே மத்திய அரசு கிடப்பில் போடப் போடலாம் என்று கூறப்பட்டது.
மேலும் இனி என்ன தான் செய்தாலும் திமுக மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்பதாலும் இந்தத் தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தை கைவிடலாம் என்று கூறப்பட்டது.
ஆனாலும், தமிழக வாக்குகளை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டோம் என்று காட்டிக் கொள்ள மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.
இதனால் இன்றிரவு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மீராகுமார் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அதில் ஒருமித்த கருத்து ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.