ஈராக் மீது போர் தொடுத்தது தவறான முடிவு: ஒபாமா
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அங்கு அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய் கூறிக் கொண்டு போர் தொடுத்தார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
ஆனால், அங்கு அணு ஆயுதங்களே இல்லை என்பது போர் தொடுத்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது. இருப்பினும் சதாம் ஹூசேனை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியில் இறங்கி வெற்றியும் பெற்றார்.
பின்னர் போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி சதாம் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந் நிலையில், போர் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈராக் மீது போர் தொடுத்தது தவறான செயல் என்பதில் அதிபர் பராக் ஒபாமாவுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் அமெரிக்கப் படைகளின் தியாகத்தால் ஈராக் இப்போது நல்ல நிலையில் உள்ளது, மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றார்.
ஈராக் தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலி:
இந் நிலையில் ஈராக் போர் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இன்று தலைநகர் பாக்தாத் மற்றும் ஷியா முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட்டில் கார் குண்டு வெடித்தது. பாக்தாத்தின் தெற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் நகரில் போலீஸ் தளம் மீது தற்கொலைப்படை தீவிரவாதி குண்டுகள் நிரப்பிய டிரக்கை மோதி வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதல்களில் 50 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 160 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.