ஐமு கூட்டணியில் இருந்து திமுக விலகல், சமாஜ்வாடி இழுபறியில் இருக்கையில் மத்திய அரசை ஆதரிக்கும் மமதா
கொல்கத்தா: ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாடி கட்சி எப்பொழுது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போ்ககு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு வெளியேறியது. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாகக் கூறி திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா தெரிவித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தான் மமதா மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மமதா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
இலங்கை பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதுடன், இந்த பிரச்சனையில் முழுமையாக அவர்களுடன் இருப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, நெருக்கடியான தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளை மத்திய அரசுக்கே விட்டு விடுவதைத்தான், முதலில் இருந்தே நாங்கள் பின்பற்றி வருகிறோம். இப்போதும் அதையே செய்வோம்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்குமோ அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.