18ம் தேதி இரவு-19ம் தேதி காலைக்குள் அப்படி என்ன நடந்தது? ப.சிதம்பரம் கேள்விக்கு கருணாநிதி பதில்
இது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசிப்பதற்குள் திமுக திடீர் என்று இந்த முடிவை அறிவிக்க காரணம் என்ன என்று கூறியுள்ளாரே?
பதில்: கடந்த 18ம் தேதி இரவுக்கும் மறுநாள் காலைக்குள்ளும் என்ன நடந்தது, திமுக எதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை என எனது அருமை நண்பர் சிதம்பரம் கூறியிருக்கிறார். கடந்த 18ம் தேதி இரவு நான் மத்திய அமைச்சர்களுடன் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியது அனைவருக்கும் தெரியும்.
மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது கூட நடந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் தெரிவிப்போம் என்றாரே தவரி நாங்கள் கூறியவற்றை ஏற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் நாங்கள் தெரிவித்த திருத்தங்களை சேர்க்க முயற்சி செய்வோம் என்றோ கூறியதாக மறுநாள் காலை வந்த ஏடுகளில் செய்தி இல்லை.
மறுநாள் காலை திருத்தப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின் நகல் கிடைத்தது. 4வது முறையாக திருத்தப்பட்ட அந்த தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதில் இலங்கைக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இல்லை என்றும் ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த தகவலின்படி தீர்மானத்தில் நாங்கள் கூறிய திருத்தங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 19ம் தேதி காலை திமுக அறிவித்த முடிவுக்கு இது தான் காரணம்.
கேள்வி: அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்படும் என்று ப.சிதம்பரம் கூறியிருப்பது சாத்தியமா?
பதில்: சாத்தியமா என்று தெரியவில்லை. அதற்கு காலம் இன்னும் இருக்கிறாதா என்றும் தெரியவில்லை. எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொடுப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது போன்று தெரிகிறது. ஆனால் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி மத்திய அமைச்சர் கமல்நாத் மற்ற கட்சிகளுடன் பேசியதாகவும், அதை பலர் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.