இளவரசி டயானாவின் 10 உடைகள் ரூ. 6.6 கோடிக்கு ஏலம்
இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகியும், அவர் மீது மக்களுக்கு இருந்து வரும் நேசம் குறைந்து விட வில்லை.
இதற்கு சமீபத்தில் லண்டனில் அவரது உடைகள் ஏலம் விடப்பட்ட சம்பவமே சான்றாக அமைகிறது.ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது அணிந்திருந்த ஆடைகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றன. இதில் ஆலிவுட் நடிகர், பாடகர், நடனக்கலைஞர் ஜான் டிரவோல்ட்டாவுடன் இணைந்து இளவரசி டயானா அமெரிக்க அதிபர் மாளிகையில் 1985-ம் ஆண்டு நடனமாடியபோது அணிந்திருந்த கவுனும் அடங்கும். இளவரசி டயானா அணிந்த 10 கவுன்கள் 1.2 மில்லியன் டாலர் விலைக்கு (ரூ.6 கோடியே 60 லட்சம்) ஏலம் போயின.
உலகின் புகழ்பெற்ற பேஷன் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏலம் விடப்பட்டது.
ஏலம் விட்ட கெர்ரி டெய்லர், இளவரசியின் உடைகள் ஏலம் விட்டது பற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா என உலகின் பல நாடுகளில் இருந்தும் இளவரசி டயானாவின் உடைகளை ஏலம் கேட்க மக்கள் குவிந்துவிட்டனர். மக்களின் இளவரசியாக திகழ்ந்த டயானாவின் உடைகளைப் பார்க்கிற பேறு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது'' என்றார்.