முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி... தமிழர்கள் வேதனை
சென்னை தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக இதுவரை 22 தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்துள்ளனர்.இது தொடர் கதையாகி வருவது தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முன்பு ஈழத்தில் மட்டுமே நடந்து வந்தது. இன்று ஈழத்தை சுடுகாடாக்கி விட்டது சிங்களம். இதனால் ஈழத்துக்கான போராட்டத்தை உலகத் தமிழர்கள் கையில் எடுத்துள்ளனர்.
உலகின் பல பாகங்களிலும் ஈழத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதை அடக்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்கிறது இலங்கை.
மறுபக்கம் தீக்குளிப்பு,உயிர்த் தியாகங்களும் உலகத் தமிழர்களை உறைய வைத்து வருகிறது. இதுவரை 22 பேர் ஈழத்துக்காக உயிரை ஈந்துள்ளனர்.
முத்துக்குமார்
சென்னை சாஸ்திரி பவன் முன் முத்துக்குமார் என்ற இளைஞன் முதன் முதலாக தீக்குளித்து உயிர் நீத்தபோது உலகம் முழுவதும் தமிழர்கள் அதிர்ந்து போனார்கள். முத்துக்குமாரின் உயிர்த் தியாகம் பல தமிழர்களை தீக்குளிப்புப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.
கடைசியாக விக்ரம்
தற்போது நேற்று விக்ரம் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்துள்ளார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை 22 பேர்
தமிழகத்தில் மட்டும் இதுவரை 18 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். வெளிநாடுகளில் 4 பேர் தியாகம் செய்துள்ளனர்.
இருந்து போராட வேண்டாமா...
ஆனால் இப்படிப்பட்ட உயிர்த்தியாகம் அவசியமற்றது, போராட்டத்திற்கு அது வலு சேர்க்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இப்படி உயிரை மாய்ப்பதற்குப் பதில், வீரத்துடன் துணிச்சலுடன் போராட வேண்டும், வெற்றி அடைய முயற்சிக்க வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.
எனவே இதுபோன்ற உயிர்த் தியாகங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்தாகவும் உள்ளது.